
போலி அரசு சார்பற்ற இயக்கத்தின் பெயரில்,குண்டர் கும்பலை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த 40 ஆடவர்களை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு 9 .30 மணியளவில் பட்டர்வொர்த் செபராங் ஜெயாவிலுள்ள ஆடம்பர உணவகம் ஒன்றில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக பினாங்கு மாநில குற்றப்புலனாய்வுப் பிரிவின் தலைவர் தலைமை துணை கமிஷினர் ரஹிமி ராய்ஸ் தெரிவித்தார். அரசு சார்பற்ற இயக்கத்தின் பெயரை பயன்படுத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்கும் நடவடிக்கை மற்றும் பினாங்கு, பெர்லிஸ், கெடா ஆகிய மாநிலங்களில் குண்டர் கும்பலை மீண்டும் வலுப்பெறச் செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தகாக 22 வயதிலிருந்து 56 வயதுக்குட்பட்ட 40 பேரை கைது செய்ததாகவும், இவர்களில் எண்மர் போலியான அரசு சார்பற்ற இயக்கத்தின் சின்னத்தை உடல் முழுவதும் பச்சை குத்தியிருந்ததாகவும் சொன்னார். மேலும் கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து பல்வேறு பொருட்கள் உட்பட அரசு சார்பற்ற போலி முத்திரையையும் கைப்பற்றியதாக தெரிவித்தார்.
