
இந்திய சமுதாயத்திற்கு சேரவேண்டிய 10 கோடி வெள்ளியை என்னிடம் வழங்கப்பட்டிருந்தால் அதை இந்திய சமுதாயத்திடம் முறையாக சேர்த்திருப்பேன் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழ உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார். சிலாங்கூரில் ஐ-சீட் திட்டத்தை வெற்றிகரமாக என்னால் வழிநடத்தப்படுகிறது. இந்தியர் பொருளாதார உருமாற்றத் திட்டமான மித்ராவை என்னிடம் வழங்கப்பட்டிருந்தால் அதையும் சிறப்பாக வழிநடத்தியிருப்பேன் என்று வீ.கணபதிராவ் குறிப்பிட்டார். கடந்த ஏப்ரல் மாதம் தன்னுடைய தலைமையின் கீழ் தொடங்கப்பட்ட ஐ-சீட் திட்டத்திற்கு 10 லட்சம் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் 250க்கும் மேற்பட்டோர் வர்த்தக உதவிப் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். இம்மாநிலத்திலுள்ள சிறு வர்த்தகங்களை மேற்கொள்ளும் இந்தியர்கள் கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவ தோற்றுவிக்கப்பட்டதே ஐ-சீட் திட்டமாகும். அதனை இன்று வெற்றிகரமாக வழி நடத்தி ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர். 10 லட்சம் வெள்ளியில் இந்திய சமுதாயத்திற்காக சிறப்பான திட்டத்தை வகுத்து அதனை என்னால் திறம்பட வழிநடத்த முடியும்போது 10 கோடி வெள்ளி ஒதுக்கீட்டில் அமைந்துள்ள மித்ரா திட்டத்தை ஏன் வெற்றிகரமாக வழிநடத்த முடியவில்லை? மித்ரா மூலம் எத்தனை இத்தியர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளனர் என்று அவர் கேள்வி எழுப்பினார். இதை நிர்வகிக்கும் பொறுப்பு என்னிடம் வழங்கப்பட்டிருந்தால் இந்நேரம் ஆயிரக்கணக்கான இந்திய தொழில் முனைவர்களை சமுதாயத்தில் உருவாக்கியிருப்பேன் என்றார் அவர்.
