
நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதித்திருக்கும் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் கின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரின் கடப்பிதழ் ரத்து செய்யும்படி பெர்சத்து கட்சி தகவல் பிரிவு தலைவர் முகமட் அஸ்ராப் கேட்டுக் கொண்டுள்ளார். கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் ரோஸ்மா ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கி இருக்கிறார். சிங்கப்பூரில் உள்ள தன் மகளுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவரை காண ரோஸ்மாவுக்கு அக்டோபர் 22 ஆம் தேதி முதல் நவம்பர் 22 ஆம் தேதி வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் நாடு திரும்பவில்லை. டிசம்பர் 2 ஆம் தேதி நடைபெற்ற வழக்கிலும் அவர் ஆஜராகவில்லை. ஆகையால் ரோஸ்மாவுக்கு வழங்கப்பட்ட கடப்பிதழ் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும் அவர் சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு அழைத்து வர பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள அவர் இது தொடர்பில் போலீஸ் புகார் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
