
இங்கிலாந்து நாட்டில் லண்டன் மேயர் பேரவையால் தமிழ் சமூகம் மற்றும் தமிழ் கலாச்சாரம் அங்கீகரிக்கப்பட்டு, ஜனவரி மாதத்தில் அனைத்து லண்டன் பெருநகரங்களிலும் பொங்கல் விழா அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்படும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.. இது இங்கிலாந்தில் உள்ள தமிழ் சமூகத்தின் திறன்கள், அறிவு, சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பை அங்கீகரிப்பதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. லண்டன் சட்டமன்றத்தில் இது தொடர்பாக முன்மொழியப்பட்ட தீர்மானத்திற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆதரவளித்துள்ளனர். விவாதத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் நிக்கோலஸ் ரோஜர்ஸ், தீர்மானத்தை முன்மொழிந்தார். இங்கிலாந்தின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் கட்டமைப்பிற்கு தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளதாகவும், இதனால் தமிழ் பாரம்பரிய மாதம் அறிவிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு லண்டன் மற்றும் பெருநகர மேயரை பேரவை கேட்டுக்கொள்கிறது என்றும் அப்போது வலியுறுத்தப்பட்டது. தமிழ்ச் சமூகம் லண்டன் நகரத்திற்கு ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பிற்கான நன்றியை பேரவை தெரிவிக்கிறது என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
