
ஹலால் சான்றிதழைக் கண்காணித்து வெளியிடும் 3 நிறுவனங்கள் அங்கீகரித்த உற்பத்தியாளர்களிடமிருந்துதான் கோழிகள் பெறப்படுவதால் இம்மாதம் தொடங்கி இறக்குமதிக் கோழிகளுக்கான ஹலால் தகுதிக் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று விவசாயம் மற்றும் உணவுத் தொழில்துறை அமைச்சர், டத்தோஸ்ரீ ரொனால்ட் கியாண்டி தெரிவித்தார். அந்த 3 நிறுவனங்களில் கால்நடைச் சேவைத் துறை, மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவை அடங்கும். இவை 3 நிறுவனங்களும் வெளிநாடுகளைச் சேர்ந்த கோழி உற்பத்தியாளர்களைக் கண்காணித்து அங்கீகாரச் சான்றிதழை வெளியிடும். அனைத்துக் கோழி இறக்குமதிகளும் சுகாதார ரீதியில் மற்றும் ஹலால் சான்றிதழ் அங்கீகரிக்கப்பட்டப் பின்னர்தான் அனுமதிக்கப்படும். நாம் கோழிகளை நீண்ட காலமாக இறக்குமதிச் செய்துக் கொண்டிருக்கிறோம். அவை அரசு அங்கீகரித்த ஆலைகளிலிருந்து இறக்குமதிச் செய்யப்படுகின்றன என்றார்.
