
சாலை குற்றப் பதிவுகளுக்கு குறைந்த பட்சம் 30 வெள்ளியுடன் கூடிய 80 விழுக்காட்டு அபராதக் கழிவை காவல் துறை வழங்குகிறது. இந்த சலுகை இன்று டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி 12 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் மலேசிய குடும்ப உணர்வின் 100 நாள் நிறைவையொட்டி இந்த அபராதக் கழிவு வழங்கப்படுவதாக சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குநர் டத்தோ வீரா மாட் காசிம் கூறினார். குற்றப்பதிவுகளுக்கான அபராதத் தொகையை கோலாலம்பூர் மாநாட்டு மைய போலீஸ் முகப்பிடம், மாநில மற்றும் மாவட்ட போலீஸ் தலைமையகங்களில் உள்ள சாலை போக்குவரத்து அபராத முகப்பிடங்களில் செலுத்தலாம். எனினும், விபத்தில் சம்பந்தப்பட்டது, அவசர தடங்களைத் பயன்படுத்தியது, ஆபத்தான முறையில் வாகனங்களை முந்திச் சென்றது, சமிக்ஞை விளக்கை மீறிச் சென்றது போன்ற குற்றங்களுக்கு அபராதக் கழிவு வழங்கப்படாது என்றார் அவர்.
