
நாட்டில் நோய்த்தொற்று மத்தியில் கேஎல்சிசி மாநாட்டு மையத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மலேசிய குடும்ப கொண்டாட்ட விழாவில் எஸ்ஓபி விதிமுறைகள் மீறப்பட்டது தொடர்பில் அதன் ஏற்பாட்டாளருக்கு ஆயிரம் வெள்ளி மட்டுமே அபராதம் விதிக்கப்பட்டது கேலிக்கூத்தாக இருக்கிறது என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ சாடினார். இந்த விழாவில் கட்டுக்கடங்காத கூட்டம் அலை மோதியது. நோய்த்தொற்று பரவுவதைத் தடுக்க மேற்கொள்ளப்பட்ட எஸ்ஓபி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என்பது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது. அப்படி இருக்கையில் விழா ஏற்பாட்டாளருக்கு ஆயிரம் வெள்ளி மட்டுமே சுகாதார அமைச்சு அபராதம் விதித்தது ஏன் என்று சார்லஸ் சந்தியாகோ கேள்வி எழுப்பினார். இதை முன் மாதிரியாக எடுத்து இனி பொதுமக்கள் துணிச்சலாக பெரிய கொண்டாட்ட விழாக்களை நடத்தி ஆயிரம் வெள்ளி அபராதம் செலுத்தி விடுவார்கள் என்று அவர் தெரிவித்தார். ஆகவே இந்த கொண்டாட்டத்தை உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே நேற்று தொடங்கி இந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
