
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சியிலும் அதற்கு முன்னர் தேசிய முன்னணி ஆட்சியிலும் ஆண்டுதோறும் 50 லட்சம் வெள்ளி தமிழ்ப்பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2021 பெரிக்கத்தான் நேஷனல் ஆட்சியில் 3 கோடி வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்போது 2022 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் தாய்மொழி பள்ளிகளுக்கு ஒட்டுமொத்தமாக 12 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 527 தமிழ்பள்ளிகளுக்கு 3 கோடியே 70 லட்சம் வெள்ளி மட்டுமே கிடைப்பது பெரும் ஏமாற்றம் அளிப்பதாக பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் வி. சிவகுமார் குறிப்பிட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் பள்ளிகளுக்கு வழங்கப்படும் மானியம் குறைந்து வருகிறது. அரசாங்கத்தில் இடம்பெற்றிருக்கும் மஇகா தலைவர்கள் இதை ஏன் துணிச்சலாக தட்டிக் கேட்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மானியம் குறைக்கப்படுவது தமிழ் பள்ளிகளை புறக்கணிக்கும் முயற்சியாக கருதப்படுகிறது என்று அவர் சாடினார். தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் 5 கோடி வெள்ளி உறுதி செய்யப்பட வேண்டும். கல்வி அமைச்சர் டத்தோ டாக்டர் ரஸ்டி ஜிடினிடம் கோரிக்கை வைத்து தமிழ்ப்பள்ளிகளுக்கு உரிய மானியத்தை பெற்றுத் தர மஇகா போராட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
