
நாட்டில் ஏற்பட்ட மோசமான வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதிலும் வெள்ளப் பேரிடர் நிர்வாக முறையிலும் புத்ராஜெயா மிகவும் தாமதமாக செயல்பட்டதாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடியுள்ளார். நாட்டை உலுக்கிய இந்த பேரிடரில் இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். வெள்ள பேரிடர் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேசிய பேரிடர் அமைப்பு மிகவும் தாமதமாக செயல்பட்டது. வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை காப்பாற்ற பலர் உடனடியாக களத்தில் இறங்கி உதவி புரிந்துள்ளனர். ஆனால் ராணுவம் தாமதமாக செயல்பட்டது ஏன் என்று அவர் கேள்வியை எழுப்பினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நான் நேரடியாக சென்று உதவினேன். அரசாங்க தலைவர்கள் கூட்டங்களை நடத்துவதில் ஆர்வமாக இருந்தாலும் மலேசியர்கள் இனம் மதம் பார்க்காமல் ஒருவருக்கு ஒருவர் தோள் கொடுத்து உதவிய காட்சிகளை பார்த்து மனம் உருகி போனதாக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.



