
மலேசிய லஞ்ச தடுப்பு ஆணையத்தின்(எஸ்.பி.ஆர்.எம்)லஞ்ச தடுப்பு மற்றும் ஆலோசனைக் குழுவில் இடம் பெற்திருந்த பொருளாதார நிபுணர் எட்மண்ட் தெரன்ஸ் அக்குழுவின் உறுப்பினர் பதவியிலிருந்து விலகி இருக்கிறார். எஸ்.பி.ஆர்.எம். தலைவராக பதவி வகிக்கும் அஸாம் ஜக்கி பங்கு பரிவர்த்தனையில் இடம் பெற்றிருக்கும் ஒரு நிறுவனத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் பங்குகள் வைத்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தும்படி தாம் ஆலோசனைக் குழுவிற்கு எழுதியிருந்த கடிதத்திற்கு,எவ்வித நடவடிக்கையும் எடுக்கத் தவறியதால் அக்குழுவிலிருந்து தாம் விலகுவதாக எட்மண்ட் அறிவித்தார். அக்குற்றச்சாட்டு தொடர்பில் ஆலோசனைக் குழுத் தலைவர் போர்ஹான் டொலாவுக்கு நவம்பர் 12ஆம் தேதி கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தேன். நாட்டு நலனை கருத்தில் கொண்டு அக்குற்றச்சாட்டை விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி இருந்தேன். தமது கடிததிற்கு பதிலளித்த போர்ஹான்,ஆலோசனைக்குழுக் கூட்டத்தை கூட்டுவதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால்,இது நாள்வரையில் அது சாத்தியமாகவில்லை மீண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி போர்ஹானுக்கு கடிதம் எழுதினேன். இவ்விவகாரம் தொடர்பில் எந்தவொரு ஆக்கப்பூர்வமான பதில் கிடைக்காத காரணத்தால் அக்குழுவிலிருந்து விலகுவதை தவிர வேறு எந்த வழியும் தெரியவில்லையென எட்மண்ட் தெரிவித்தார். கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி,மக்களவைக் கூட்டத்தொடரில் சுங்கைப் பூலோ நாடாளுமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் ஆர். சிவராசா எஸ்பிஆர்எம் தலைவர் ,அஸாம் அனுமதிக்கப்பட்டதை விட கூடுதலான பங்குகளை வைத்திருப்பதால் மக்களவையில் விவாதிக்கப்பட வேண்டுமெனக் கோரும் தீர்மானம் ஒன்றை சமர்ப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
