
செராஸ் ஆடம்பர அடுக்கு மாடி குடியிருப்பைச் சேர்ந்த ஆடவர் ஒருவரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் கொன்றதாக சமூக வலைதலங்களில் பரவி வரும் செய்தியை சிஐடி பிரிவு இயக்குநர் அப்துல் ஜாலில் ஹசான் மறுத்துள்ளார். குடும்ப உறவில் சிக்கல் இருந்ததால் இவரின் மனைவி டிசம்பர் 7-ஆம் தேதி இவரை விட்டு பிரிந்து சென்றதால் சம்பந்தப்பட்ட ஆடவர் மனஅழுத்தத்தில் இருந்திருக்கிறார். தவிர சம்பவம் நடந்து அன்று இவர் தனியாக பாரந்தூக்கியில் நுழைந்தது சம்பந்தப்பட்ட குடியிருப்பின் மறைகாணி காட்சியில் பதிவாகி உள்ளது. மேலும், அங்கு காணப்பட்ட மதுப்புட்டியும் முகக் கவசமும் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சம்வங்களை வைத்துப் பார்க்கும்பொழுது சம்பந்தப்பட்ட ஆடவர் 20-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது என்றும் அப்துல் ஜாலில் தெரிவித்துள்ளார்.



