
உலகம் முழுவதும் பரவி வரும் ஒமிக்ரோன் அச்சுறுத்தலுக்கு நடுவே தைப்பூசத் திருவிழாவைக் கொண்டாட இந்துக்கள் ஒன்று கூடலாமா என்பதை சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடீன் உறுதியளிக்க வேண்டும் என்று மலேசிய முன்னேற்றக் கட்சி தேசியத் தலைவர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டுள்ளார். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்கு திறந்த மடல் எழுதி 48 மணி நேரத்திற்கு மேலாகியும் இதன் தொடர்பில் கைரி ஜமாலுடின் அமைதி காத்து வருகிறார். நான் முன் வைத்த கோரிக்கை மிகவும் முக்கியமானது. தைப்பூச விழா தொடர்பில் இந்துக்களின் பாதுகாப்பையும் நலனையும் மலேசிய அரசாங்கம் உறுதி செய்வதுடன் தைப்பூச விழா தொடர்பில் வரையப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும். ஓமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து பயணிகளும் மலேசியர்களும் இங்கு திரும்புகின்றனர். அனைத்து உயிர்களையும் எப்படியாவது பாதுகாப்பதுடன் தைப்பூசத் திருநாள் ஏதும் அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்க வேண்டியதும் நம் கடமையாகும் என்றார் அவர்.



