
இந்தோனேசியாவில் இருந்து தொழிலாளர்களை வரவழைப்பது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அடுத்த மாதம் இருதரப்பு கையொப்பத்திற்கு தயாராக உள்ள நிலையில், இதுகுறித்து பெரிய அளவில் சிக்கல் எழ இருப்பதை மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஒப்புக் கொண்டுள்ளார். இந்தோனேசியத் தொழிலாளர்கள் வேலை அனுமதிக்காக மலேசிய அரசாங்கத்திடம் விண்ணப்பிக்கும் முன், நாட்டிற்குள் சுற்றுலா விசா மூலம் நுழையலாம் என்பதை ஜாகர்த்தா விரும்பவில்லை. இதைப் பயன்படுத்தி சில தரப்பினர் தொழிலாளர்களை சுரண்டுவது குறித்து இந்தோனேசிய அரசு கவலை அடைந்துள்ளது. இந்தோனேசிய அரசின் இந்த புதிய முன்னெடுப்பு தொடர்பில் மனிதவள அமைச்சகம் பெரும் சிக்கலை எதிர்கொண்டிருப்பதாக சரவனன் தெரிவித்துள்ளார்.
