
எத்தியோப்பிய் நாட்டில் தொடர்ந்து நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரினால் அந்த நாட்டில் டீக்ரேப் பகுதியில் மக்கள் பஞ்சத்திற்கும் பசிக்கும் ஆட்பட்டுள்ளனர். இந்த வட்டாரத்தைச் சேர்ந்த சிறார்களில் 40%க்கும் அதிகமானவர்கள் பட்டினி கிடப்பதாகவும் இந்த நிலை இங்குள்ள மருத்துவமனைகளிலும் பிரதிபலிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ள இளந்தாய்மாரில் சிலர், சிகிச்சையை ஏற்கமுடியாத அளவுக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு தாய்ப்பால்கூட ஊட்ட முடியாத அளவுக்கும் மெலிந்தும் உடல் வற்றியும் காணப்படுகின்றனர். இதை உலக மனித அவலம் என்று பன்னாட்டு மனிதநேய செயற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால், எத்தியோப்பிய அதிகாரத் தரப்பினரோ, மனித நேய உதவிகளுக்கு தடை விதிக்கவில்லை என்று தெரிவித்து சமாளிக்கப்பார்க்கின்றனர்.
