
இந்து அமைப்புகளின் நிருவாகத்தை கையகப்படுத்தவும் நிருவாகம் செய்யவும் பினாங்கில் மெர்டேக்காவிற்கு முந்தைய சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது செல்லாது என அறிவிக்க வேண்டும் என மலேசிய இந்து சங்கத் தலைவர் மற்றும் பினாங்கு கோவில் நிருவாகக் குழுவைச் சேர்ந்த முன்னாள் உறுப்பினர்கள் ஐவர் உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். மலேசிய இந்து சங்கத் தலைவர் மோகன் சண்முகம், கே. சேகர், பி சுப்பரமணி, ஏ பெரியசாமி, எம். ராம்குமார், எம் ஐயப்பன் ஆகிய ஆறு பேரும் சார்வு செய்துள்ள தொடக்க மனுவில், 1906 இந்து அறநிலையச் சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்துள்ள அடிப்படை சுதந்திரத்திற்கு எதிரானது என்று தெரிவித்துள்ளனர். தற்போதைய சட்டத்தின்படி, பினாங்கு இந்து அறப்பணி வாரியம், மாநிலத்தில் உள்ள இந்து அமைப்புகளிடம் இருந்து எழுத்துப்பூர்வ பதில்கள் மற்றும் நிதிக் கணக்குகளைக் கோருவதற்கு அதிகாரம் இருக்கிறது. தவிர, எந்த இந்து அமைப்பின் நிர்வாகத்திலிருந்தும் உறுப்பினர்களை நீக்கவும் புதிய உறுப்பினர்களை நியமிக்கவும் அதிகாரம் உள்ளதாக அந்த மனுவில் ஆறு பேரும் தெரிவித்துள்ளனர்.
