
மலேசியாவின் மக்கள் தொகை, 2020 குடியிருப்பு கணக்கெடுப்பின்படி 32.4 மில்லியன் என்றும் இதில் இந்தியர்களின் எண்ணிக்கை 6.7 விழுக்காடு என்றும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் அறிவித்துள்ளார். இந்த நிலையில், அரசாங்க வேலைவாய்ப்பில் இந்தியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வாய்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய சமுதாயம் எதிர்பார்க்கிறது. மலேசியத் தமிழர்களுக்கு ஏறக்குறைய 3 விழுக்காடு அளவில்தான் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக 2008-இல் அப்போதையை மனித வள அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ச. சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார். 2013 பொதுத் தேர்தல் சமயத்தில் இதற்காக இந்திய சமுதாயத்திடம் மன்னிப்பு கேட்ட அப்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப், இந்த விசயத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சொல்லி இருந்தார். 2008-இல் கேள்வி கேட்ட ஜசெக எம்பி மு.குலசேகரனே 10 ஆண்டுகளுக்குப் பின் மனித வள அமைச்சரானார். இப்போது, மீண்டும் ஒரு தமிழரே மனித வள அமைச்சராக இருந்தும், மலேசியத் தமிழர்களுக்கான வேலைவாய்ப்பு அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் வழங்கப்படவில்லை. பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரி யாக்கோப். இனியும் காலம் கடத்தாமல் இந்திய இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை அரசாங்க நுறுவனங்களில் அளிக்க வேண்டும் என்று ஏஎஸ்டி செய்தித் தளம் வலியுறுத்துகிறது.
