
இந்தியாவில் இருந்து பறந்து வந்த ஏவுகணை, பாகிஸ்தான் மண்ணில் விழுந்ததற்கு, நாங்கள் நினைத்து இருந்தால், பதிலுக்கு ஏதாவது செய்திருக்கலாம்; ஆனால் நாங்கள் நிதானத்தைக் கையாண்டோம் என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார்.
கடந்த வாரம், மார்ச் 9ஆம் நாள், பாகிஸ்தானின் மியான் சன் என்ற இடத்தில் வெடிமருந்து நிரப்பப்படாத காலியான இந்திய ஏவுகணைக் கலன் தவறுதலாக விழுந்தது.
ஒரு நாட்டின் வான் எல்லைக்குள் எது நுழைந்தாலும் அது தாக்குதலாகவேக் கருதப்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏவுகணை போன்ற ஒரு பொருள் பக்கத்து நாட்டில் விழுந்தால் அதற்கு பதிலடி கொடுக்கும் தார்மிக உரிமை இருப்பதாக பன்னாட்டு பாதுகாப்பு விதிகளும் சட்டங்களும் கூறுகின்றன. இருந்தாலும், இந்த விடயத்தில் பாகிஸ்தான் விவேகமாக நடந்து கொண்டது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
