
மே 26-இல் இடம்பெற்ற ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், நோஃபுர் சர்மா என்ற பாஜக பேச்சாளர், நபிகள் நாயகத்தைப் பற்றி அவதூறாகப் பேசியதிலிருந்தே அந்த மாபெரும் ஜனநாயக நாட்டில் சமய அடிப்படையில் சூடான விவாதம் நிலவிய நிலையில், கடந்த 3 நாட்களாக அரபு முஸ்லிம் நாடுகளும் ஓஐசி இஸ்லாமிய நாடுகளும் இதன் தொடர்பில் தொடர் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
அரபு நாடுகளில் உள்ள வர்த்தக மையங்களில் இந்தியப் பொருள் விற்பனைக்கு தடை எழுந்துள்ளது. அங்குள்ள குப்பைத் தொட்டிகளில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.
இந்த நிலையில், மலேசிய வெளியுறவுத் துறையும் இந்தியத் தூதரை அழைத்து நாட்டின் கண்டன அறிக்கையை வழங்கியுள்ளது. சம்பந்தப்பட்ட பேச்சாளரையும் அவருக்கு ஆதரவு தெரிவித்த நவீன் குமார் ஜிண்டாலையும் கட்சி இடைநீக்கம் செய்திருப்பது வரவேற்கத் தக்கது என்றாலும் இஸ்லாம் சமய இறை தூதர் நபிகள் நாயகத்தை விமர்சித்திருப்பது, மலேசியாவின் பாரம்பரிய நட்பு நாடாகவும் வர்த்தகப் பங்காளியாகவும் உள்ள இந்தியாவில் இடம்பெற்றிருக்கக் கூடாது என்றும் இந்தியத் தூதரிடம் அளிக்கப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



