
மற்ற சமயங்களை இழிவுபடுத்தும் நபர்களின் மீது இதுவரை நடவடிக்கை எதனையும் எடுக்காத அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்று ‘சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம்’ எனும் இஸ்லாத்தின் சகோதரிகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இஸ்லாத்தை விமர்சித்து இழிவுபடுத்தும் நபர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுத்துவரும் அரசு, மற்ற சமயங்களை இழிவுபடுத்திப் பேசும் மத போதகர்களையும் தனி நபர்களையும் எதுவும் செய்யாமல் இருப்பது ஏமாற்றத்தை அளிப்பதாக சிஸ்டர்ஸ் இன் இஸ்லாமின் நிர்வாக இயக்குனர் ரோசா தெரிவித்துள்ளார்.
நாட்டின் எல்லா இன மக்களும் சமம் என்றிருக்கும்போது, சிறுபான்மை இனங்களின் சமயத்தை இழிவு படுத்துவோர் தண்டிக்கப்படாமல் விடுபடுவது நேர்மையுள்ள அரசுக்கு இலக்கணம் ஆகாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இஸ்லாம் அல்லாத சமயங்களை இழிபவுபடுத்திய நபர் ஒருவரை சட்டத் துறைத் தலைவர் தற்காத்து, அவரின் உரையானது தவறுதலாகப் புரிந்து கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது ஏற்றுக்கொள்ள முடியாது கூற்று என்று சிஸ்டர்ஸ் இன் இஸ்லாம் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
