
தமது பிரதமர் பதவிக் காலத்தில் தமது பிள்ளைகளைச் செல்வந்தர்களாக ஆக்கியதை நிரூபிக்க வேண்டுமென துன் மகாதீர் சவால் விடுத்தார். அண்மையில் அந்தக் குற்றசாட்டை தம் மீது கூறியிருக்கும் முன்னாள் சட்டத் துறைத் தலைவர் Affandi Ali (அபாண்டி அலி) அதனை நிரூபிக்க வேண்டுமென்றும் தவறினால், மானநட்ட வழக்கைச் சந்திக்க நேரிடும் என்று மகாதீர் எச்சரித்துள்ளார். நஜிப் ரசாக்கின் மீது 1எம்டிபி வழக்கில் குற்றவாளி என்று அமெரிக்க நீதிமன்றமும் உள்ளூர் நீதிமன்றங்களும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்திருக்கின்றன. அதே வேளையில், நஜிப் குற்றமற்றவர் என்று சான்றிதழ் கொடுத்து அவரின் மீது வழக்கைத் தொடுக்காமல் பாதுகாத்த அபாண்டி அலியை அந்தக் காரணத்திற்காகவே தாம் பதவியில் இருந்து நீக்கியதாக மகாதீர் குறிப்பிட்டார்.
