
நாடாளுமன்றத்தை கலைக்கும் எந்தவொரு முடிவும் அரசாங்கத்தை அமைத்த அனைத்து கட்சிகளின் முடிவாக இருக்க வேண்டும். பெரிக்காத்தான் நேசனல், சரவா கட்சிகளின் கூட்டணி மற்றும் தேசிய முன்னணி ஆகியவை ஒன்று சேர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்கும் முடிவை எடுக்க வேண்டும் என பாஸ் கட்சியின் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துவான் மான் நினைவுறுத்தியுள்ளார். பொதுத் தேர்தலை நடத்துவதற்காக கூடிய விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டுமென அம்னோ கோரிக்கை விடுத்துள்ளதை குறித்து கருத்துரைத்தபோது அவர் இதனை தெரிவித்தார். மக்களின் சமூக நலன், நாட்டின் பொருளாதார அம்சங்களும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



