
வன விலங்கு உறுப்புகளை வெளி நாடுகளுக்குக் கடத்தியதோடு பண பரிமாற்ற மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் மலேசியா டத்தோஸ்ரீ தியோ பூன் சிங் (57) ஜூன் மாதம் தாய்லாந்தில் கைது செய்யப்பட்டு அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
அனைத்துலக கிரிமினல் எண்டெர்பிரைஸ் அமைப்பின் தலைவரான அவர், காண்டா மிருக கொம்புகளை வெளிநாடுகளுக்குக் கடத்தியதாகவும் அரிய வகை வன விலங்குகளைக் கொல்வோருக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் அவர் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம் சாட்டியுள்ளது.
மலேசியாவிலும் தாய்லாந்திலும் தொழில்களை நடத்தி வரும் தியோ, ஆப்பிரிக்காவில் இருந்து காண்டா மிருகக் கொம்புகளை அமெரிக்காவுக்கு கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
725,472 டாலர் (ரிம. 3.3 மில்லியன்) பெறுமான 73 கிலோ காண்டா மிருகக் கொம்புகளை அவர் அமெரிக்காவுக்குக் கடத்தியதாக நம்பப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டு சிறையும், சட்டவிரோதப் பண பரிவர்த்தனைக் குற்றத்திற்கு 20 ஆண்டு சிறையும் விதிக்கப்படும்.
