
கெடா, சுங்கை பட்டாணியிலுள்ள, பிளாஸ்டிக் தொழிற்சாலையில் மேற்கொள்ளப்பட்ட, அதிரடி சோதனை நடவடிக்கையில், 39 கள்ளக்குடியேறிகள் கைது செய்யப்பட்டனர். அச்சோதனை நடவடிக்கையில், மொத்தம் 168 அந்நிய ஆண் தொழிலாளர்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, கெடா மாநில குடிநுழைவுத் துறை இயக்குனர் முஹமட் ரிட்சுவான் முஹமட் சாயின் தெரிவித்தார்.
நள்ளிரவு மணி 12-க்கு தொடங்கிய அச்சோதனை, மூன்று மணி நேரத்திற்கு நீடித்த வேளை ; தொழிற்சாலை தங்கும் விடுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அந்த தங்கும் விடுதி, மிகவும் அசுத்தமாக காணப்பட்டதோடு, நாற்றமாக இருந்தது. அதோடு, தொழிலாளர்களுக்கு முறையான குளியல் – கழிவறை வசதிகளும் ஏற்படுத்தி தரப்படவில்லை என முஹமட் ரிட்சுவான் குறிப்பிட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் 17 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் 36 பேர் மியன்மாரையும், இருவர் வங்காளதேசத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். முறையான ஆவணம் எதையும் வைத்திருக்காத அவர்களில் சிலர், மூன்றாண்டுகளுக்கும் மேலாக நாட்டில் தங்கி இருப்பதாக கூறியுள்ளனர்.
