
2013 ஜூலை 1ஆம் தேதி பகாங், பெராவில் உள்ள திரியாங் வர்த்தக மையத்தில் வர்த்தகர் ஒருவரை மிரட்டி 1,500 ரிங்கிட்டைப் பறித்த வழக்கில், மை வாட்ச் எனப்படும் கிரிமினல் குற்றக் கண்காணிப்புப் பணிக்குழுவின் முன்னாள் தலைவர் ஆர். ஸ்ரீ சஞ்சீவன் விடுதலையானார்.
2018 ஆகஸ்டு 14ஆம் தேதி தெமர்லோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அவருக்கு 3 மாத சிறைத் தண்டனையும் 7,000 ரிங்கிட் அபராதத்தையும் விதித்தது. அபராதத்தைச் செலுத்திய பின்னர் அவர் 6,000 ரிங்கிட் பிணையில், ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
2020 நவம்பரில் அவரின் மேல் முறையீட்டை விசாரித்த உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. எனினும், 2020 டிசம்பர் 4ஆம் தேதி 35,000 ரிங்கிட் வைப்பு நிதி, இருவர் உத்தரவாதத்தின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டு, மேல் முறையீடு செய்ய அனுமதிக்கப்பட்டது.
இறுதியில், அவரின் வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் Ahmad Nasfy Yasin (அமாட் நாஸ்ஃபி யாசின்), Ahmad Zaidi Zainal (அமாட் ஸைடி ஸைனால்), Mariana Yahya (மரினா யாஹ்யா) ஆகியோர் அடங்கிய அமர்வு, மாஜிஸ்திரேட் சம்பவ இடத்தில் இருந்த 7 பேரை சாட்சியம் அளிக்க அழைக்காமல் ஸ்ரீசஞ்சீவனுக்கு தண்டனை விதித்தது நீதிக்கு முரணானது என கூறி, அவரை விடுதலை செய்தது.
ஸ்ரீசஞ்சீவன் சார்பில் பிரபல வழக்கறிஞர் வி. சிதம்பரம், எஸ். பிரகாஸ், Miguel Sequerah (மிகுவெல் செக்யூரா) ஆகியோர் ஆஜராகினர்.
