
🔊To listen to this news in Tamil, Please select the text.
அம்னோ பொதுப் பேரவையில் கட்சியின் மேல்மட்ட இரு பதவிகளுக்கான போட்டிக்குத் தடை விதிக்கும் தீர்மானத்திற்கு எதிராக திரெங்கானு உறுப்பினர் Aizat Fikri Nasir (ஐஸாட் ஃபிக்ரி நாஸிரும்) நெகிரி செம்பிலான் உறுப்பினர் Fiqri Firdaus (ஃபிக்ரி ஃபிர்டாவுஸும்) சங்கங்களின் பதிவதிகாரியிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் துணை விதி பிரிவு 10க்கு எதிராக அந்தத் தீர்மானம் முரணாக இருப்பதாகவும் அத்தீர்மானம் பொதுப் பேரவை நடப்பதற்கு 14 நாள்கள் முன்னதாகவும் உச்சமன்றக் கூட்டம் நடப்பதற்கு 7 நாள்களுக்கு முன்னதாகவும் தாக்கல் செய்யப்படவில்லை என்று அவர்களிருவரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அத்தீர்மானம் அடிமட்டத் தொண்டர்களோடு விவாதிக்கப் படவில்லை, உச்சமன்றமும் அது சம்பந்தமான விளக்கத்தைத் தெரிவிக்கவில்லை. அது பொதுநலனுக்கு முக்கியத்துவம் தராமல் அது கட்சித் தலைவருக்கும் துணைத் தலைவருக்கு மட்டுமே பலனைத் தருமென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்தீர்மானம் கட்சியின் துணை விதிகளுக்கு முரணாக இருப்பதால், சங்கங்களின் பதிவதிகாரி விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவ்விருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
