
🔊To listen to this news in Tamil, Please select the text.
சூலு சுல்தான் வாரிசுகளின் சபா உரிமை கோரல் வழக்கில் பொதுச் சேவையில் தப்பான நடவடிக்கை எடுத்ததாகத் தம்மீது தொடுக்கப்பட்டிருக்கும் வழக்கை ரத்து செய்ய முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் எதிர் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
2018 ஜுனில் இருந்து 2020 பிப்ரவரி வரை சட்டத் துறைத் தலைவராக இருந்த தாம், 2012ஆம் ஆண்டு நீதிமன்ற விதிமுறை 18, 19ஆம் பிரிவுகளின் படியே நடவடிக்கை எடுத்ததாகவும் தம்மீதான வழக்கு அவதூறானது, அற்பமானது மற்றும் தீய நோக்கம் கொண்டது என்றும் டோமி தமது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
டோமி தோமஸின் எதிர் மனுவானது கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் அவரின் சார்பில் கோத்தா கினபாலு செய்ஸு வழக்கறிஞர் நிறுவனத்தின் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர், சூலு சுல்தான் வாரிசுகளின் வழக்கில் ஸ்பெயின் சமரச அதிகாரி கோன்ஸாலோ ஸ்டாம்பா, 1,492 கோடி டாலர் (6,250 கோடி ரிங்கிட்)ஐ சூலு சுல்தான் வாருசுகளுக்கு மலேசிய அரசாங்கம் செலுத்த வேண்டுமென்று தீர்ப்பளித்திருந்தார். எனினும், கடந்த வாரம் ஸ்பெனிய அரசமைப்பு நீதிமன்றம் அந்தத் தீர்ப்பினை ரத்து செய்து உத்தரவிட்டது.
டோமி தோமஸின் மீதான வழக்கை சபா அமைச்சர்களான Jeffrey Kitingan (ஜெஃப்ரி கிட்டிங்கான்), Joachim Gunsalam, ஜோச்சிம் குணசலாம், உட்பட 9 பேர் தாக்கல் செய்துள்ளனர்.



