
🔊To listen to this news in Tamil, Please select the text.
மாணவரை மதம் மாறத் தூண்டிய ஆசிரியர் ஒருவரின் மீதான விசாரணை தொடர்வதாக செராஸ் போலீஸ் தலைவர் ஸாம் ஹாலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.
விசாரணை அறிக்கை அரசு வழக்கறிஞரிடம் தாக்கல் செய்யப்பட்டு, மறுபடியும் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட மாணவரின் பெற்றோர் அது பற்றிய சந்தேகத்தை எழுப்பிய பின்னர், இந்த விளக்கத்தை ஸாம் ஹாலிம் சுட்டிக் காட்டினார்.
கடந்த பிப்ரவரி மாதம் செராஸில் உள்ள இடைநிலைப் பள்ளி மாணவர் ஒருவர் இஸ்லாத்திற்கு மதம் மாறினால், அவர் தேசிய அளவில் பந்து விளையாட்டுத் துறையில் உயர வாய்ப்பிருப்பதாக ஆசிரியர் தூண்டியதாக மாணவரின் பெற்றோர் போலீஸ் புகாரை அளித்திருந்தனர்.
இந்நிலையில், போலீஸார் இதில் மெத்தனம் காட்டினால், அது பற்றி நீதிமன்றத்தில் வழக்கைத் தாக்கல் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக மலேசிய இந்து ஆகம அணித் தலைவர் அருண் துரைசாமி குறிப்பிட்டிருந்தார்.



