
🔊To listen to this news in Tamil, Please select the text.
வீடொன்றில் ஏற்பட்டத் தீயில் நான்கு சிறார்கள் பரிதாபமாக மரணமடைந்தனர். இத்துயரச் சம்பவம் மூவார், கம்போங் சபாக் ஆவோர், லோரோங் ஹாஜி முகமது எனும் இடத்தில் நேற்றிரவு நிகழ்ந்தது.
நான்கு மற்றும் ஆறு வயதுடைய இரு சிறுமிகளும் மூன்று மற்றும் எட்டு வயதுடைய இரு சிறார்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதை சம்பவ இடத்திலிருந்த மருத்துவக் குழுவினர் உறுதி செய்ததாக மூவார் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் தலைவர் உதவி ஆணையர் 11 ஷரிசால் மொக்தார் கூறினார்.
இந்த தீச்சம்பவம் குறித்து இரவு 7.49 மணியளவில் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தீயணைப்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் சம்பவ இடத்தை அடைந்த போது பகுதி பலகையிலான அந்த வீட்டின் 80 விழுக்காட்டுப் பகுதி தீயில் அழிந்து விட்டதை தீயணைப்பாளர்கள் கண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தீ முழுமையாகப் கட்ப்படுத்தப்பட்டப் பின்னர் பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த நான்குச் சிறார்களும் வீட்டின் குளியலறையில் மயங்கிய நிலையில் கண்டு பிடிக்கப்பட்டனர். எனினும் மருத்துவக் குழுவினர் நடத்திய சோதனையில் அந்நால்வரும் இறந்து விட்டது உறுதி செய்யப்பட்டது என ஷரிசால் சொன்னார்.
இறந்த நான்கு சிறார்களின் உடல்களும் மேல் நடவடிக்கைக்காக போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டன. தீக்கான காரணம் மற்றும் சேத மதிப்பு ஆராயப்பட்டு வருகிறது என அவர் மேலும் தெரிவித்தார்.



