
🔊To listen to this news in Tamil, Please select the text.
ஒப்பந்த அடிப்படையிலான மருத்துவப் பணியாளர்களை ஓய்வூதியம் இல்லா நிரந்தரப் பணியாளர்களாக நியமிப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு பொதுச் சேவைத் துறையுடன் பேச்சு நடத்தி வருகிறது.
நடப்பு ஆற்றலுக்கு மீறிய பணிச்சுமையைக் கையாள்வது மற்றும் கடந்த 2021ஆம் ஆண்டில் 2,910 கோடி வெள்ளியை எட்டிய ஓய்வூதியத் தொகையினால் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுகாதார அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தாபா கூறினார்.
ஓய்வூதியத் திட்டம் காரணமாக பெரும் சுமை ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. கடந்த 2011ஆம் ஆண்டில் 310 கோடி வெள்ளியாக இருந்த ஓய்வூதியத் தொகையின் அளவு 2021ஆம் ஆண்டில் 2,910 கோடி வெள்ளியாக அதிகரித்து விட்டது. இந்த கடுமையானச் சுமை என்பதோடு இந்த தொகை தொடர்ந்து உயர்வு காண்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தப் பிரச்சனையிலிருந்து மீளும் முயற்சியாக ஒப்பந்தப் பணியாளர்களை ஓய்வூதியம் இல்லாத நிரந்தரப் பணியாளர்களாக நியமினம் செய்வதற்கு பரிந்துரைத்துள்ளோம். இவர்கள் வீடுகளுக்கான கடனுதவி உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் அனுபவிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.



