
🔊To listen to this news in Tamil, Please select the text.
அடைக்கலம் நாடி மலேசியாவுக்கு வந்துள்ள சர்ச்சைக்குரிய மத போதகர் Zakir Naik (ஸாக்கிர் நாய்க்), இந்தியர்களின் மீது அபாண்டமான பழியைச் சுமத்தி இங்கு மத துவேஷத்தை உருவாக்கி குளிர் காய நினைத்து சமய உரைகளை நிகழ்த்தி இருப்பதாக கிள்ளான் முன்னாள் எம்பி Charles Santhiago (சார்ல்ஸ் சந்தியாகோ) நீதிமன்ற சாட்சியத்தில் தெரிவித்தார்.
கிளந்தானின் உரை நிகழ்த்தியபோது இங்குள்ள இந்தியர்கள் நாட்டிற்கு விசுவாசமாக இல்லையென்றும் அவர்கள் இந்நாட்டு பிரதமருக்கு விசுவாசம் செலுத்தாமல் இந்தியப் பிரதமருக்கே விசுவாசம் காட்டுவதாகவும் குறிப்பிட்டு சர்ச்சையை கிளப்பியிருப்பதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
இந்தியர்களின் விசுவாசத்தின் மீது எந்தவொரு ஆய்வையும் செய்யாமல் அவ்வாறு ஸாக்கிர் நாய்க் கூறியிருப்பது இந்தியர்களுக்கு எதிராக மலாய்க்காரர்களைத் தூண்டிவிடும் நோக்கம் என்றும் இங்கு அண்டிப் பிழைப்பதற்கு மலாய்க்காரர்களின் ஆதரவைத் திரட்டவே அவர் திட்டமிடுவதாக சார்ல்ஸ் குறிப்பிட்டார்.
இந்தியாவில் தம்மீதான வழக்குகளை எதிர்கொள்ள முடியாமல் ஓடி வந்து, ஒளிந்து வாழும் ஸாக்கிர் நாய்க்கிற்கு இங்குள்ள இந்தியர்களின் விசுவாசம் பற்றி கேள்வி எழுப்ப எந்தவித உரிமையும் தகுதியும் இல்லையென சார்ல்ஸ் சந்தியாகோ தமது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.



