-நக்கீரன்

கோலாலம்பூர், ஏப்.12:
தேசிய பதிவு அலுவலகங்களில் திருமண பதிவு நடைபெறும் வேளையில், சம்பந்தப்பட்ட பதிவதிகாரி முன்னிலையில் மணமகனும் மணமகளும் உறவும் நட்பும் சூழ்ந்திருக்க மலாய் மொழியில் திருமண ஒப்பந்த உறுதிமொழியை வாசித்து ஏற்பது வழக்கம்.
இதில் முற்றிலும் மாறுபட்ட நிலையில் 29 வயது யாழினி வினோஷாவும் 31 வயதான கோபாலும் மலாய் மொழியில் திருமண உறுதிமொழியை ஏற்கும் முன் தாய்மொழியான தமிழில் திருக்குறளை ஓதினர்.
பேராக் மாநிலம், ஈப்போ, மேரு சாலையில் அமைந்துள்ள மாநில தலைமை பதிவு அலுவலகத்தில் ஏப்ரல் 05, புதன்கிழமை நடைபெற்ற திருமணப் பதிவின்போது, பகாங் மாநில சபாய் சட்டமன்றத் தொகுதியில் இருமுறை மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக செயல் கட்சி உறுப்பினர் தமிழச்சி காமாட்சியின் மூத்த மகளான யாழினி, தன் தாயைப் போலவே தமிழ் மறை திருக்குறளுக்கு மதிப்பு அளித்ததுடன் தமிழ்ப் பள்ளிக்குச் செல்லாத தன் கண்ணாளன் கோபாலையும் தன்னுடன் சேர்ந்து திருக்குறளை ஓத வைத்திருக்கிறார்.
இதற்கு அனுமதிகேட்ட சமயத்தில், தொடக்கத்தில் ஏதும் அறியாமல் தடுமாறிய திருமண பதிவதிகாரி சேம் சிமால் த/பெ பகாருடின், பின்னர் திருக்குறளை ஓத அனுமதித்துவிடு, தொடர்ந்து திருமண பதிவு நடவடிக்கையை மேற்கொண்டார்.

திருமணப் பதிவுக்கு புதுச் சேலை வாங்காமல், இருக்கின்ற சேலைகளில் நல்ல புடவையை உடுத்திக் கொண்டு பதிவலகத்திற்கு வந்த எளிமையான மருமகளைப் பார்த்து, திருமதி தனம் நாகராஜன்,
“கோபால் எங்களுக்கு கடைக்குட்டி பிள்ளை; அதனால், வரும் டிசம்பர் மாத முதல் நாளில் நடைபெற இருக்கும் பாரம்பரிய திருமணத்தின்போது, நன்கு ஒப்பனை செய்துகொள்ள வேண்டும் என்ற கேட்டுக்கொண்டார். அதற்கு மறுமொழி சொன்ன யாழினி, “நான் எங்கள் வீட்டில் மூத்த பிள்ளை; அதனால் இரவல் நகையெல்லாம் போட்டுக் கொண்டு போலியான அலங்ககாரம் செய்துகொள்ள மாட்டேன். என்னிடம் என்னென்ன இருக்கின்றனவோ அவற்றை மட்டுமே அணிந்துகொண்டு திருமணத்திற்கு தயாராவேன் என்று மறுமொழி கூறியிருக்கிறார் யாழினி.
அத்துடன், பண்டாரம், சமஸ்கிருத மந்திரம், ஆடம்பரம், அலங்காரம் எதுவும் இல்லாமல் பார்த்துக் கொள்வேன்.
மற்றவர்கள் மூக்கில் விரலை வைக்கும் அளவுக்கு திருமணம் செய்வதைவிட, நாங்கள் நல்ல வண்ணம் வாழ்வதற்கு ஏற்ப எங்களுக்கான திருமணமாகத்தான் அது அமையும்” என்றும் யாழினி தன் மாமியாரிடம் உறுதியாக சொல்லி இருக்கிறார்.
இவரின் தாய் தமிழச்சி காமாட்சியும், மலாய் பாரம்பரிய உடை அணியாமல், சேலை அணிந்து கொண்டுதான் பதவி உறுதிமொழி ஏற்றார். சட்டமன்ற கூட்டங்களுக்கும் சேலை அணிந்து கொண்டுதான் செல்வது வழக்கம்.
குறிப்பாக, சட்டமன்ற உறுப்பினராக தேர்வுபெற்றபின் பதவி உறுதிமொழி ஏற்ற இருதடவையும் திருக்குறளை ஒதிய பின்னரே பதவி ஏற்றிருக்கிறார்.
திடீரென்று தமிழில் பேசுவதைக் கண்ட பகாங் மாநில அப்போதைய முதல்வர் டான்ஸ்ரீ அட்னான் யாக்கோப், காமாட்சியை அருகில் அழைத்து தமிழில் என்ன பேசினீர்கள் என்று கேட்டபொழுது,
அகரமுதல் எழுத்தெல்லாம் – ஆதி
பகவன் முதற்றே உலகு
என்னும் திருக்குறளைத்தான் ஓதினேன் என்றதுடன் அதற்கான விளக்கத்தை மலாய் மொழியில் சொன்னதும், அட இதுதானா? நான் என்னவோ ஏதோவென்று நினைத்து கவலைப்பட்டேன் என்றாராம்.
மொத்தத்தில் தாயைப் போலவே, மகளும் திருக்குறள் நங்கையாகத் திகழ்கிறார்
