
🔊To listen to this news in Tamil, Please select the text.
இஸ்ரேலியப் படையினருக்கும், பாலஸ்தீன ஆயுதக் குழுவினருக்கும் இடையில் நிகழாண்டு முதல் நடைபெற்று வரும் மோதல் பலியானவர்களின் எண்ணிக்கை கடந்த 18 ஆண்டு வரலாற்றில் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக மேற்கு ஆசிய நாடுகளுக்கான ஐ.நா. தூதர் டார் வெனெஸ்லாண்ட் தெரிவித்தார்.
நிகழாண்டில் மட்டும் தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களும், 30 இஸ்ரேலியர்களும் உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலை நிறுத்துவதற்கான அரசியல் தீர்வு காண்பதற்கு சில அடிப்படை பிரச்சனைகள் களையப்பட வேண்டும் என்றும் இவர் தெரிவித்தார்.
இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையில் அமைந்துள்ள தீவிர வலதுசாரி அரசு பாலஸ்தீனத்தின் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை வேட்டையாடுவதாகக் கூறி, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்துவதும், அதற்கு பதிலடியாக இஸ்ரேலியர்கள் மீது பாலஸ்தீனர்கள் தாக்குதல் நடத்துவதும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அதிகரித்து வருகிறது.
