
🔊To listen to this news in Tamil, Please select the text.
இவ்வாண்டு நவம்பர் தொடங்கி அடுத்தாண்டு மார்ச் வரையில், நாட்டில் நீடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் வடகிழக்கி பருவ மழை காலத்தை எதிர்கொள்ள 24 ஆயிரத்து 283 தீயணைப்பு மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு, படகுகளை கையாளும் திறன், நீரில் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ளும் பயிற்சிகள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளதாக, தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு இயக்குனர் டத்தோ அஹ்மாட் இர்ஜாம் ஒஸ்மான் தெரிவித்தார்.
அதே சமயம், மீட்புப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் சிறு படகுகள், கடல் உபகரணங்கள் உட்பட அனைத்து பொருட்களும் நல்ல நிலையில் இருப்பதும் உறுதிச் செய்யப்படும் என்றாரவர்.
பருவமழை காலத்தில், மீட்புப் படையினர் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்பதால், அவர்களின் விடுமுறையும் முடக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ள, மொத்த நான்காயிரத்து 795 பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள வேளை ; வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்படும் மாநிலங்கள் பட்டியலில் சரவாக் முதலிடம் பிடித்துள்ளது.
கிளந்தான், பஹாங், சபா, ஜொகூர், சிலாங்கூர், பினாங்கு, பேரா, திரங்கானு, கெடா, மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர், லபுவான் ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களை வகிக்கின்றன.



