
🔊To listen to this news in Tamil, Please select the text.
அடுத்தாண்டு, ஜனவரி முதலாம் தேதி தொடங்கி, வீடுகளுக்கு முன் வாகனங்களை நிறுத்த, பாசிர் கூடாங் நகராண்மைக் கழகம் விதித்திருக்கும் தடை அமலுக்கு வரும்.
கடந்த வாரம் புதன்கிழமை நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில், அது குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக, பாசிர் கூடாங் நகராண்மைக் கழகத்தின் தலைவர் டத்தோ அஸ்மான் ஷா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அந்த தடையை அமல்படுத்த, பாசிர் கூடாங் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் அனைவரும், கொள்கையளவில் இணக்கம் தெரிவித்திருப்பதையும் அஸ்மான் சுட்டிக்காட்டினார்.
அதனால், இப்பொழுது தொடங்கி, அந்த தடை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்படுவதோடு, விளக்கமளிக்கப்படும்.
அக்டோபர் நான்காம் தேதி, வீட்டிற்கு முன் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கும், பாசிர் கூடாங் நகராண்மைக் கழகத்தின் அறிக்கை ஒன்று வைரலானது.
இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து கடந்த மாதம் வரையில், வீட்டிற்கு முன் வாகனங்களை நிறுத்தியதால், ஏற்பட்ட போக்குவரத்து சுணக்கம் தொடர்பில் பெறப்பட்ட 349 புகார்களை அடுத்து, பாசிர் கூடாங் நகராண்மைக் கழகம் கட்டங் கட்டமாக அந்த தடையை அமல்படுத்த முடிவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
