
🔊To listen to this news in Tamil, Please select the text.
இம்மாதம் 13 ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் மாநில ம.இ.கா தொடர்புக் குழுக் கூட்டங்களில் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப்பிற்கு மன்னிப்பு வழங்கும் மற்றும் அவரை விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக ம.இ.கா தேசிய தலைவர் டான்ஸ்ரீ SA விக்னேஸ்வரன் தெரிவித்தார். இந்நாட்டில் இந்தியர்களின் மேம்பாட்டில் நஜீப் அதிக அளவில் பங்காற்றிருக்கிறார் என்பதை கட்சியின் பேராளர்கள் உணர்ந்துள்ளதை இது காட்டுவதாக அவர் கூறினார். அனைத்து மாநில ம.இகா தொடர்பு குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றிய பின்னர் முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கினால் தொடக்கிவைக்கப்படும் ம.இ.காவின் 77 ஆவது ஆண்டு பேராளர் மாநாட்டிலும் இத்தீர்மானம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும் என விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
பெர்லீஸ். கெடா, பினாங்கில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை அடுத்து பஹாங் , கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூரில் நிறைவேற்றப்படும் என அவர் கூறினார். இந்த மன்னிப்பு விவகாரத்தை மாட்சிமை தங்கிய பேரரசரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்படி பிரதமர் அன்வாரை ம.இ.கா கேட்டுக்கொள்ளும் என அவர் கூறினார். இந்திய சமூகத்திற்கு அதிகமாக உதவிய தலைவராக நஜீப் விளங்குவதாக வின்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் பள்ளிகள் நவீன கட்டங்கள் பெறுவதற்கு குறைந்தது 900 மில்லியன் ரிங்கிட்டை நஜீப் வழங்கியிருக்கிறார். எனவே அவருக்கு இந்திய சமூகத்தினர் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக மலாக்கா ம.இ.கா தொடர்பு குழு கூட்டத்தை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது விக்னேஸ்வரன் தெரிவித்தார். இதுவரை 9 மாநிலங்களின் ம.இ.கா தொடர்பு குழுக் கூட்டங்கள் நடைபெற்று முடிந்துள்ளதாகவும் திரெங்கானு, கிளந்தான் , பேரா மற்றும் சபா ஆகிய மாநில ம.இ.காவின் ஆண்டுக் கூட்டங்கள் இன்னும் நடைபெறவில்லையென அவர் கூறினார்.
