
🔊To listen to this news in Tamil, Please select the text.
ரவாங்கில் அமைந்துள்ள தேவி ஸ்ரீ மகா வடபத்ர காளியம்மன் ஆலயம் அமைந்துள்ள இடம் விவசாயம் நிலம் என்பதனால் அதனை மாநில அரசு இடம் மாற்றம் செய்யவுள்ளது. ஆகையால் மாற்று நிலத்தை உடனடியாக உறுதி செய்ய வேண்டுமென இன்று கோம்பாக் மாவட்ட அலுவலகத்தில் மகஜர் வழங்கப்பட்டது.
ஆலய நிர்வாகத்தினருக்கு ஆதரவாக நம்பிக்கை இயக்கம் இன்று கோம்பாக் மாவட்ட அலுவலக அதிகாரி நோர் அஸ்லினா அப்துல் அஸிடம் மகஜரை வழங்கினார்.
கடந்த 30 ஆண்டுகளாக இந்த ஆலயம் செயல்பட்டு வருகிறது. ஆலயத்தை இடம் மாற்றம் செய்ய நிர்வாகம் ஒப்புக் கொண்டுள்ளது. அதேவேளை மாவட்ட இலாகா, மாநில அரசு ஆலயத்திற்கான மாற்று நிலத்தை இரண்டு வாரத்திற்குள் உறுதி செய்துவிட வேண்டுமென நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் டத்தோ கலைவாணர் தெரிவித்தார்.
நிலம் தற்போது உள்ளது. ஆனால் அதனை உறுதி செய்ய இந்த விவகாரம் சிலாங்கூர் ஆட்சிக் குழுவின் ஒப்புதலை பெற வேண்டுமென கூறப்படுகிறது.
அன்று தொட்டு இன்று வரை யார் ஆட்சிக்கு வந்தாலும் ஆலய பிரச்சினைகள் தீர்ந்தபாடில்லை. தெருவில் போராடும் நிலை நீடித்து கொண்டுதான் வருகிறது.
தேசிய கோட்பாட்டின் முதல் வரி இறைவன் மீது நம்பிக்கை வைத்தல் என்பதாகும். ஆகையால் இந்நாட்டில் வாழும் அனைவரின் இறை நம்பிக்கை நாம் மதித்தல் வேண்டும். ஆகையால் இந்த ஆலய நில விவகாரத்தில் கூடிய விரைவில் நல்ல பதில் கிடைக்க வேண்டும் என டத்தோ கலைவாணர் தெரிவித்தார்.
