
🔊To listen to this news in Tamil, Please select the text.
சிலாங்கூர் செத்திய ஆலாமில் உள்ள செம்பனைத் தோட்டமொன்றில் சகல வசதிகளுடன் கூடிய புறம்போக்குக் குடியிருப்பில் இன்று அதிகாலை, 132 கள்ளக் குடியேறிகள் கைதாகினர்.
அவர்களில் 130 பேர் இந்தோனீசியர்கள், இருவர் வங்காளதேசிகள் என குடிநுழைவுத் துறையின் துணைத் தலைமை இயக்குநர் ஜாஃப்ரி தஹா தெரிவித்தார்.
குடிநுழைவுத் துறை அதிரடி நடத்தியச் சோதனையில் கைதானவர்களில் 76 பேர் ஆண்கள், 46 பேர் பெண்கள், 13 பேர் குழந்தைகள் என்றார் அவர்.
தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட உளவு நடவடிக்கையில், அக்கள்ளக் குடியேறிகள் 4 ஆண்டுகளாக அக்குடியிருப்பில் தங்கி வந்திருக்கின்றனர்; அங்கு மின்சார வசதியெல்லாம் கூட இருப்பதாக ஜாஃப்ரி சொன்னார்.
அந்தப் புறம்போக்கு இடத்தை, கள்ளக்குடியேறிகளுக்கு உள்ளுர்வாசிகள் வாடகைக்கு விட்டிருக்கின்றனர்; அவர்களுக்கு மின்சார இணைப்பை வழங்குவதும் உள்ளூர்வாசிகளே.
அந்த 0.6 ஹெக்டர் நிலத்திற்கான ஆறாயிரம் ரிங்கிட் மாத வாடகையை கள்ளக் குடியேறிகள் தங்களுக்குள் பகிர்ந்து, கூட்டுச் சேர்ந்து செலுத்தி வருகின்றனர்.
மளிகைக் கடை, உணவு அங்காடி, தொழுகையிடம் என சகல வசதிகளும் அங்கு உண்டு.
அவர்கள் பெரும்பாலும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தூய்மைப் பணியாளர்களாவும், உணவகப் பணியாளர்களாவும், கட்டுமானத் தொழிலாளர்களாவும் வேலை செய்கின்றனர்.
முறையான பயணப் பத்திரங்கள் இன்றி நீண்ட காலமாகவே அவர்கள் இங்கு தங்கியிருப்பது விசாரனையில் தெரிய வந்திருக்கிறது.
இவ்வேளையில், அந்த 3 மணி நேர அதிரடி சோதனையின் போது, பிடிபடுவதில் இருந்து தப்பிக்கும் முயற்சியாக, பலர் வீட்டுக் கூரைகளில் ஏறி அமர்ந்து கொண்டதையும், வீட்டுக்குள்ளேயே பூட்டிக் கொண்டதையும் காண முடிந்ததாக அவர் மேலும் கூறினார்.
1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் விசாரிக்கப்படுகின்றனர்.
கள்ளக் குடியேறிகளுக்கு நிலத்தை வாடகைக்கு விட்ட உள்ளுர்வாசிகளுக்கு என்ன தண்டனை எனக் கேட்ட போது, அதுவும் அதே சட்டத்தின் கீழ் அது முடிவுச் செய்யப்படும் என்றார்.
கள்ளக்குடியேறிகளை வேலைக்கு அமர்த்தினால் சட்ட நடவடிக்கைப் பாயும் என் பொது மக்களையும் முதலாளிமார்களையும் அவர் எச்சரித்தார்.



