
🔊To listen to this news in Tamil, Please select the text.
நாட்டின் கல்வி முறையில் பிரிவினையை ஏற்படுத்தும் அம்னோ இளைஞர் தலைவர் டாக்டர் அக்மால் சாலேவின் போக்கு, கடும் கண்டனத்திற்கு உரியது என்று மலேசிய முன்னேற்றக் கட்சி-எம்ஏபி தலைவர்களில் ஒருவரான டத்தோ செல்வம் தெரிவித்துள்ளார்.
இன ரீதியாக பிளவை ஏற்படுத்தும் அம்னோவின் முயற்சியா இது என்று வினாத் தொடுத்துள்ள டத்தோ செல்வம், அம்னோவின் இத்தகையப் போக்கினால்
மெர்டேக்கா காலத்தில் இருந்து மலேசியர்களிடையே அமைதியின்மை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
அம்னோ தலைமையிலான தேசிய முன்னணி அரசு, சுமார் 60 ஆண்டுகளாக சிறுபான்மை மக்கள்மீது பிரிவினைப் போக்குடன் நடந்துகொண்டதால் மக்களிடையே பிளவும் அமைதியின்மையும் ஏற்பட்டன.
ஒரு லட்சம் மலாய் மக்கள் தங்கள் பிள்ளைகளை சீனப் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். தாய்மொழிவழிக் கல்விதான் வெற்றிக்கு அடிப்படை என்பதை மலாய் சமூகம் ஏற்றுக் கொண்டுள்ளது என்பதற்கு இது தக்க சான்றாகும்.
சிறுபான்மை மக்கள் மற்றும் தாய்மொழி பள்ளிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவும் குறிப்பாக மலேசியர்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தாமல் இருக்கவும் அம்னோ தலைமை அதன் இளைஞர் பிரிவுத் தலைவருக்கு அறிவுறுத்த வேண்டும்.
உண்மை நிலை என்னவென்றால், மலேசியர்கள் அனைவரும் ஒருமைப்பாட்டால் ஒன்றுபட்டவர்கள். அரசியல்வாதிகள்தான், தங்கள் அதிகாரத்தை தக்கவைப்பதற்காக மக்களிடையே பிரிவினையைக் கற்பித்து அதன் மூலம் வெறுப்பை விதைக்கின்றனர் என்று டத்தோ செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.



