
🔊To listen to this news in Tamil, Please select the text.
2023-ஆம் கல்வி ஆண்டு, மலேசியக் கல்விச் சான்றிதழ்-எஸ்பிஎம் தேர்வு வெற்றியாளர்கள் அனைவருக்கும் மலேசிய இந்து சங்கம் வாழ்த்து தெரிவிக்கிறது என்று அதன் தேசியத் தலைவர் ‘சிவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் கல்விப் பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் இந்தத் தேர்வை எழுதிவிட்டு ஆவலுடன் காத்திருந்த மாணவர்களுக்கான முடிவை மலேசியத் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ளது.
இதில் 11,713 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் ‘ஏ’ பெற்று சாதனை புரிந்துள்ளனர். தேர்வு எழுதிய 3லட்சத்து 73ஆயிரத்து255 பேரில், 2லட்சத்து 26ஆயிரத்து358 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று தங்கள் கல்விப் பயணத்தின் அடுத்தக் கட்டத்திற்கு தயாராக உள்ளனர்.
தத்தம் கல்வி ஆற்றல், விருப்பம், குடும்பச் சூழல், மெட்ரிகுலேஷன் கல்வி உள்ளிட்ட அரசாங்க வாய்ப்பு அனைத்தையும் கருத்தில் கொண்டு தங்களின் எதிர்காலத்திற்கும் வளமான வாழ்விற்கும் இப்பொழுதேத் திட்டமிட்டு, உயர்க் கல்வியை மேற்கொண்டு முன்னேற்றம் காணவும் நல்ல குடிமக்களாகத் திகழவும் மலேசிய இந்து சங்க தேசியப் பேரவை சார்பில் மீண்டும் வாழ்த்துவதாக ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் தன் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தேர்ச்சி பெறாத மாணவர்கள், மனந்தளராமல் எஸ்பிஎம் மறு தேர்வை எழுதலாம்; ‘திவெட்’ தொழில் நுட்பக் கல்வியைப் பெற முயற்சிக்கலாம்; மஇகா-வின் கல்விக் கரமான எம்.ஐ.இ.டி.யின் டேஃப் கல்லூரியில் சேர்ந்து மின்னியல், இயந்தியரவில் தொழில்கல்வியைப் பெறலாம். எனவே, எஸ்பிஎம் தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள், தங்களுக்கான அடுத்தக்கட்ட வாய்ப்பு நிறைய இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
குறிப்பாக, இந்திய மாணவர்கள் தங்களின் கல்விப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து-வாழ்வில் முன்னேற அருள் வழங்கும்படி எல்லாம்வல்ல பரம்பொருளின் பொற்றாள் பணிவதாக தங்க கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.
