சமய நல்லிணக்கத்திற்கு ஊறுவிளைவிக்கும் ஊடகம்
இந்து சங்கத் தலைவர் தங்க கணேசன் கண்டனம்!

🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், ஜூன் 21:
மலேசிய இந்து சங்கத்திற்கு தொடர்பில்லாத ஒருவர், மதம் மாறிச் செல்வது சம்பந்தப்பட்டவரின் தனி விருப்புரிமை; ஆனால், தேவையில்லாமல் மலேசிய இந்து சங்கத்தின் பெயரைப் பயன்படுத்துவது சங்கத்திற்கு சங்கடத்தை ஏற்படுத்துவதுடன் நாட்டில் நிலவும் சமய நல்லிணிக்கத்திற்கு கேடு விளைவிப்பதுமாகும் என்று இந்து சங்க தேசியத் தலைவர் ‘செவநெறிச் செல்வர்’ தங்க கணேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நெகிரி செம்பிலான் மாநிலப் பேரவையில் இடம்பெற்றிருந்த ராசா ஜெயா வட்டாரப் பேரவையில் 2005-ஆம் ஆண்டு, டிசம்பர் 17-ஆம் நாள் உறுப்பினராக இணைந்த வட்டாரவாசியான சம்பூரணம் த/பெ அப்பு என்ற பெயர் கொண்ட பெண், அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பின் தன் உறுப்பியத்தை புதுப்பிக்கவில்லை.
சாதாரண உறுப்பினராக இணைந்திருந்த அவர், அதற்குப் பின் ஆண்டுக் கட்டணம் செலுத்தாததால், அவரின் பெயர் இந்து சங்க உறுப்பியப் பட்டியலில் இருந்து 14 ஆண்டுகளுக்கு முன்பே நீக்கப்பட்டுவிட்டது; தவிர, அவர் மாநில அளவிலோ அல்லது வட்டார அளவிலோ எந்த பொறுப்பும் வகிக்கவில்லை.
இப்பொழுது அந்த வட்டாரப் பேரவையே செயல்படவில்லை.
இந்த நிலையில், அமீனா பூரணம் என்ற பெயருடன் கடந்த செவ்வாய்க் கிழமை (ஜூன்-18)இல் மதம் மாறியுள்ளார். ஏற்கெனவே அவரின் கணவர், இஸ்லாத்தைப் பின்பற்றுபவர். போதாக் குறைக்கு பூரணத்தின் மகன், மகள், மறுமக்கள் உள்ளிட்ட அனைவரும் முஸ்லிம்கள்.
இந்த நிலையில், பூரணமும் மதம் மாறினால், அந்தமட்டில் நில்லாமல், இந்து சங்கப் பொருளாளர் முஸ்லிம் மதத்தைத் தழுவினார் என்று இல்லாத பதவியைச் சொல்லி செய்தி பரப்புவது, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதைப் போன்றது.
இந்த மதமாற்றச் சடங்கை நிறைவேற்றியவரும் ஏற்கெனவே மதம் மாறி சமய வெறுப்புப் பிரச்சாரம் செய்பவருமான ஃபிர்டாவுஸ் வோங் என்னும் நபர் தெரிவித்ததாக ஓர் இணைய ஊடகமும் இந்து சங்கப் பொருளாளர் இஸ்லாத்தைத் தழுவினார் என்று உண்மைக்குப் புறம்பான செய்தியை வெளியிடுவது, இன்னும் மோசமானது.
எந்த ஊடகமாக இருந்தாலும் எந்த செய்தியையும் சரிபார்த்தபின் வெளியிட வேண்டும். உண்மையில்லாத செய்தியை வெளியிடுவதுடன் நாட்டில் நிலவும் சமய-சமூக நல்லிணக்கத்திற்கு கேடு விளைவிக்கும் இதுபோன்ற ஊடகத்தை அரசு கண்காணித்து, கண்டிக்க வேண்டும்.
தகவல் துறையின்கீழ் இயங்கும் பல்லூடக ஆணையமும்(MCMC) இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்வதாக, மலேசிய இந்து சங்க தேசியத் தலைவரும் மலேசிய சர்வசமய ஆலோசனை மன்றத்தின் உறுப்பினருமான ‘ஸ்ரீகாசி-சங்கபூசன்’ தங்க கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்.
