
🔊To listen to this news in Tamil, Please select the text.
-நக்கீரன்
கோலாலம்பூர், ஆக.17–
“மஇகா-விற்கு இது அரசியல் மீட்சிக் காலம்; வரும் மூன்றாண்டு அரசியல் பயணம், மஇகா-விற்கு மிகமிக முக்கியமானது.”
‘அதனால், தேசிய முன்னணியும் சரி, தற்போதைய ஒற்றுமை அரசும்சரி, மஇகா,-வைப் புறக்கணிக்கும் நிலை தொடருமானால், நாங்கள் அணிமாறவும் தயங்க மாட்டோம்” என்று மஇகா தேசிய துணைத் தலைவரும் மஇகாவின் ஒரே (நாடாளுமன்ற)மக்கள் பிரதிநிதியுமான டத்தோஸ்ரீ மு.சரவணன் முழங்கினார்.
இம்மலையகத் திருநாட்டின் மூத்த அரசியல் இயக்கமும் மலேசிய இந்திய சமுதாயத்தை நாடு விடுதலை அடைந்த காலம் முதல் மத்தியக் கூட்டரசில் தொடர்ந்து 60 ஆண்டுகளாக பிரதிநிதித்த அரசியல் பேரியக்கமுமான மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச மாநிலப் பேரவையின் 78-ஆவது பேராளர் மாநாடு, மாநிலத் தலைவர் டத்தோ சைமன் ராஜா தலைமையில் இன்று ஆகஸ்ட் 17-ஆம் நாள், இதே இயக்கத்தின் தேசிய தலைமையகத்து நேதாஜி அரங்கில் நடைபெற்றபோது, அதை முறைப்படி தொடங்கி வைக்குமுன் தலைமையுரை ஆற்றிய சரவணன் மேற்கண்டவாறு பேசினார்.
இருக்கும் இடத்தில் தொடர்ந்து கொண்டே சிறுமையை எதிர்கொள்வதைக் காட்டிலும் இடமாறி தோல்வி கண்டாலும் விழுப்புண்ணைத் தடவுவது பெருமையானது என்று எய்ம்ஸ்ட் பல்கலைக்கழக இணைவேந்தரும் சொல்வேந்தர் பட்டத்துடன் மேடை உலா வருபவருமான சரவணன், கூட்டத்தில் கலந்து கொண்டோருக்கு நகைமிகவும் கட்சியினருக்கு உற்சாகமிகவும் பேசினார்.
குறைந்த அளவு, அரசு சார்பு நிறுவன(ஜி.எல்.சி.)ப் பொறுப்புகூட மஇகா-விற்கு வழங்கப்படுவதில்லை.
அத்கற்காக இந்த இயக்கம் சோர்ந்துவிடவில்லை; நாட்டில் எங்கோ ஒரு மூலையில் இந்திய சமுதாய மாணவர் ஒருவருக்கு கல்வி நிதிச் சிக்கல் என்றால் உடனே உதவிக்கரம் நீட்டும் ஆற்றல், இந்த இயக்கத்திற்கு மட்டும்தான் உண்டு.
அதற்கேற்ப, மேநாள் தலைவர் ‘நினைவில் வாழும்’ துன் சாமிவேலு உரிய அடித் தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.
அதனால்தான், அவர் மறைந்தும் வாழ்கிறார் என்றெல்லாம் பேசிய சரவணன் இன்னும் பலவற்றைத் தொட்டுப் பேசினார்.
மிகுதி தொடரும் செய்தியில்.. .



