
🔊To listen to this news in Tamil, Please select the text.
கோலாலம்பூர், செப். 1-
ஒரு காலத்தில் நாட்டில் வலிமைமிக்க ஒரு கட்சியாக வலம் வந்த பிபிபி என்று அழைக்கப்பட்ட மைபிபிபி , அந்த பலத்தை மீண்டும் பெற்று கம்பீர நடை போட வேண்டும் என்று தேசிய முன்னணி தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜாஹிட் ஹமிடி கேட்டுக் கொண்டார்.
பல்லின கட்சி என்ற தனது நிலைப்பாட்டை மைபிபிபி தொடர்ந்து கட்டிக் காக்க வேண்டும் என்று இங்குள்ள உலக வாணிப மையத்தில் இக்கட்சியின் 71 ஆவது பேராளர்கள் மாநாட்டை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது குறிப்பிட்டார்.
பல போராட்டங்களைச் சந்தித்த இக் கட்சியை இக்கட்டத்தில் இருந்து காப்பாற்றியவர் அமரர் டத்தோஸ்ரீ மெக்லின் டிகுருஸ் என்பதை சுமார் 2,000 பேராளர்கள் கலந்து கொண்ட இம்மாநாட்டில் துணைப் பிரதமருமான ஜாஹிட் நினைவு கூர்ந்தார்.
மைபிபிபி மீண்டும் தேசிய முன்னணியில் இணைவது குறித்து இதன் உச்சமன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று பின்னர் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் துணைப் பிரதமர் பேசினார்.
“தேசிய முன்னணி கூட்டணியின் சட்டவிதிகள்படி இதன் உச்சமன்ற முடிவு அமையும்” என்றார்.
மைபிபிபி தேசிய முன்னணியில் இருந்து இதுகாறும் விலகியதில்லை என்று இச்செய்தியாளர் கூட்டத்தில் கலந்து கொண்ட இக்கட்சியின் இடைக்கால தலைவரான டத்தோ டாக்டர் லோகபால மோகன் கூறினார்.
பதிவு ரத்து செய்யப்பட்ட மைபிபிபி தற்போது அதிகாரப்பூர்வமாகச் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.
“இந்நிலையில் மீண்டும் தேசிய முன்னணியுடன் இணைந்து அதன் செயல்திட்டங்களுக்கு வலுசேர்ப்போம்” என்றார்.
மைபிபிபி தலைவர் பதவியை இரு தரப்புகள் கோரியதைத் தொடர்ந்து அதன் பதிவை சங்கப் பதிவகம் (ஆர்ஓஎஸ்) 2019 ஆம் ஆண்டு ரத்து செய்தது.
டி குருஸ் தரப்பை ஆதரிப்பதாக உள்துறை அமைச்சு கடந்தாண்டு அறிவித்ததைத் தொடர்ந்து கட்சியின் பதிவை ஆர்ஓஎஸ் மீண்டும் ரத்து செய்தது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டி குருஸ் காலமானதைத் தொடர்ந்து டாக்டர் லோகபால மோகன் இக்கட்சியின் இடைக்கால தலைவரானார்.



