
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்பின் எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் நிறைவேற்றுவதற்கான விண்ணப்பம் முறையான வழிகளில் செய்யப்பட வேண்டும்.
கூட்டாட்சிப் பகுதிகளில் செய்யப்படும் குற்றங்களுக்கான அனைத்து மன்னிப்பு விண்ணப்பங்களும் பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகள் பின்பற்ற வேண்டும் என மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் உத்தரவிட்டுள்ளார்.
ஆகவே, இந்த விவகாரத்தில் முறையாக நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.
மாறாக வேறு வழிகளில் அல்ல என்று தேசிய சட்டத்துறை அலுவலகம் (ஏஜிசி) கூறியது.
இதன் அடிப்படையில் நஜிப் உட்பட எந்தக் கைதியும் எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தை வீட்டுக் காவலில் கழிக்க வேண்டும் என்று எந்தத் தரப்பும் முன்மொழிய விரும்பினால்,
மாட்சிமை தங்கிய மான்னர் தலைமையிலான மன்னிப்புக் குழுவின் பரிசீலனைக்கு அந்த விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
நடைமுறையில் உள்ள சட்டங்கள், விதிமுறைகளின் கீழ் அந்த விண்ணப்பம் உள்ளதா என்பதை அக் குழு ஆராய்ந்து முடிவு எடுக்கும் என்று ஏஜிசி இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
அரசியலமைப்பு சட்டம் பிரிவு 42 (1) இன் அடிப்படையில் மாட்சிமை தங்கிய மாமன்னர்,
கோலாலம்பூர், புத்ராஜெயா, லாபுவான் என கூட்டரசுப் பிரதேசங்களில் செய்யப்படும் எந்தவொரு குற்றத்திற்கும் மன்னிப்பு, சட்ட நிவாரணம் வழங்க அதிகாரம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
