
மாமன்னரின் கூடுதல் உத்தரவு கடிதத்தை மறைத்தது யார் என்பதை கண்டறிய அரச விசாரணை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் இதனை வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில் கழிக்கும் வகையில் முன்னாள் மாட்சிமை தங்கிய மாமன்னர் கூடுதல் உத்தரவை வழங்கியுள்ளார். இந்த கூடுதல் உத்தரவு கடிதத்தை மறைத்தது யார் என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.
இந்த கடிதத்தை மறைந்தது குறித்து அரச விசாரணை ஆணையம் அமைத்து உரிய விசாரணை நடத்த வேண்டும். அரசியல் சூழ்ச்சியில் டத்தோஸ்ரீ நஜிப்பின் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகிறது.
டத்தோஸ்ரீ நஜிப்புக்கு விடுதலை வேண்டும். இதை தான் நாட்டு மக்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறார்கள். ஆனால் டத்தோஸ்ரீ நஜிப்புக்கு எதிராக தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
டத்தோஸ்ரீ நஜிப் வீட்டுக் காவலில் வைக்கப்பட வேண்டும் என்ற மாமன்னரின் கூடுதல் உத்தரவு கடிதத்தை மறைத்தது மிகப் பெரிய குற்றமாகும். இப்போது நாட்டு மக்களுக்கே உண்மை தெரிந்து விட்டது. இனியும் அரசியல் நாடகம் நடத்தாமல் அவரை உடனடியாக உரிய நீதி வழங்கப்பட வேண்டும்.
டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்கிற்கு ஆதரவாக மலேசிய மக்கள் சக்தி கட்சி உறுதுணையாக இருக்கும். தலைநகரில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மக்கள் சக்தி கட்சியின் முக்கிய தலைவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
