
அடுத்த ஈராண்டுகளில் 10,000 உள்ளூர் திறமையாளர்களுக்கு டிஜிட்டல் துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
மலேசியாவின் தொழிலாளர் மேம்பாட்டிற்கான பிராந்திய மையமாக மாறுவதற்கான முயற்சிகளுக்கு இணங்க இப்பயிற்சிகள் வழங்கப்படும்.
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான எச்சிஎல் டெக்னாலஜி ஈடுபாட்டின் மூலம் உலகளாவிய நிபுணத்துவத்தை ஒருங்கிணைக்கும் திறன் பயிற்சி திட்டம் இதுவாகும்.
செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பம் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் இப்பயிற்சிகள் கவனம் செலுத்தப்படும்.
இந்த ஆண்டு பயிற்சிகளுக்கு நிதியளிக்க மனிதவள அமைச்சு சொக்சோ, எச்ஆர்டி கோர்ப் மூலம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல், தகவல் தொழில்நுட்பத் துறைகளில் 5,000 வேலை தேடுபவர்களுக்கு பயிற்சி அளிக்க சொக்சோ, எச்ஆர்டி கோர்ப் கூட்டாக நிதியளிக்க உறுதிபூண்டுள்ளன.
10,000 பேர் என்ற இலக்கை அடைவதில் மற்ற அமைச்சுகளின் பங்கேற்பு, அர்ப்பணிப்பும் இதில் இணைக்கப்படும்.
முன்னதாக இங்குள்ள சொக்சோ தலைமையகத்தில் சொக்சோ, எச்ஆர்டி கோர்ப், எச்சிஎல் நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு தலைமையேற்ற அமைச்சர் ஸ்டீவன் சிம் இதனை கூறினார்.
இந்நிகழ்வில் சொக்சோ வாரியத் தலைவர் டத்தோஶ்ரீ சுபஹான் கமால், தலைமை நிர்வாக அதிகாரி டத்தோஶ்ரீ டாக்டர் முகமத் அஸ்மான் ஹஜிஸ், எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநர் டத்தோ வீரா ஷாகுல் தாவூத், எச்சிஎல் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீமதி சிவசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
