
மலேசியாவின் ஐந்தாவது பிரதமராக பணியாற்றிய மறைந்த துன் அப்துல்லாஹ் அகமட் படாவியின் உடல், இன்று தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் முழு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட உள்ளது.
அவரது மருமகனும் முன்னாள் அமைச்சர் மற்றும் அரசியல் தலைவருமான கைரி ஜமாலுடின், நேற்று இரவு தேசிய இதய நிறுவனத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தகவலை உறுதிப்படுத்தினார்.
துன் படாவிக்கு இறுதி அஞ்சலி செலுத்த விரும்பும் பொதுமக்கள், இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேசிய பள்ளிவாசலில் அவரது ஜனாஸா மற்றும் இறுதி மரியாதை நிகழ்வில் பங்கேற்கலாம். ஜனாஸா தொழுகைக்குப் பிறகு, பிரதான பிரார்த்தனை மண்டபத்தில் இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் நடைபெறும்.
முஸ்லிம்கள் மட்டுமின்றி, முஸ்லிம் அல்லாதவர்களும் அஞ்சலி செலுத்த தேசிய பள்ளிவாசலை தேடலாம். ஆனால் அவர்கள் மரியாதைக்குரிய உடைகள் அணிந்து வர வேண்டியது அவசியமாகும்.
நண்பகலுக்குப் பிறகு, இறுதித் தொழுகையும் பிரார்த்தனையும் நடைபெறும். அதன் பின்னர், துன் அப்துல்லாஹ் படாவியின் உடல், தேசிய பள்ளிவாசலில் உள்ள மாவீரர் கல்லறையில் அடக்கம் செய்யப்படும்.
