
சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு, மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண கட்டொழுங்கையும் நேரந்தவறாமையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் ஏற்பாடு செய்த எஸ்பிஎம் மாணவர்களுக்கான தேசிய கருத்தரங்கில் உரையாற்றிய அவர், “கல்வி மட்டுமே வாழ்க்கையை உயர்த்தும் பலத்த ஆயுதம். குறிப்பாக இந்தியர்கள் கல்வி வழியாக மட்டுமே சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டை அடைய முடியும்” எனத் தெரிவித்தார்.
1982ஆம் ஆண்டு பேராசிரியர் டான்ஸ்ரீ டாக்டர் எம். தம்பிராஜா தொடங்கிய ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் கடந்த 43 ஆண்டுகளில் 50,000 பட்டதாரிகளை உருவாக்கி, சமூகத்தில் கல்வியின் மதிப்பை உயர்த்தி வருவதாகவும், இந்த நிறுவனத்தின் முன்னாள் மாணவராக இருப்பது பெருமை என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த கருத்தரங்கில் நாடு முழுவதும் இருந்து வந்த 450 மாணவர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக பி40 பிரிவு மாணவர்களுக்கு இலவசமாக இதில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. நிகழ்வின் முடிவில் பி40 மாணவர்களுக்கு இலவச கல்வி திட்டத்தை பாப்பாராய்டு தொடங்கி வைத்தார். இந்திய மாணவர்களை வெற்றிப் பாதைக்கு வழிகாட்டுவதில் இந்நிலையத்தின் இணை இயக்குநர் சுரேன் கந்தா, தேசிய கல்வி குழு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ கணேஷ், குகனேஸ்வரி, அசோக் வேலு, ராஜேஸ் உள்ளிட்ட இளைஞர் படையினரின் ஆக்கப்பூர்வ ஈடுபாடு பாராட்டுக்குரியது என்றார்.
