
கோலாலம்பூர், பிரிக்பீல்ட்ஸ் – வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை கடைகள் டி.பி.கே.எல் ஏற்பாட்டில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், இந்த சந்தையில் கடைகளை எடுத்த வியாபாரிகள் பல்வேறு குறைகளை வெளிப்படுத்தியுள்ளனர்.
வியாபாரிகள் கூறுகையில்,
“பலருக்கு கடைகள் கிடைக்கவில்லை. உள்ளூர் வியாபாரிகளுக்கும் மிகக் குறைவான கடைகளே வழங்கப்பட்டுள்ளன. வழங்கப்பட்ட கடைகளும் மிகவும் பலம் குறைவானவை. மழை அல்லது காற்று அடித்தால் துணிகள் பறந்து விடுகின்றன. ஒரு மழையை கூட தாங்க முடியாத அளவுக்கு இக்கடைகள் பலவீனமாக உள்ளன. இப்படி இருந்தால் தீபாவளி வியாபாரம் எப்படிச் செய்வது?” என்று கேள்வி எழுப்பினர்.

இந்த பிரச்சினையை முன்னிறுத்தி, ம.இ.கா-வைச் சேர்ந்த டத்தோ சைமன் ராஜா பேசியபோது,
“முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் இருந்தபோது, லிட்டில் இந்தியாவில் தீபாவளி சந்தை சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டது. எந்த வருடமும் வியாபாரிகளுக்கு சிரமம் ஏற்படவில்லை. ஆனால் இப்போது வழங்கப்பட்ட கடைகள் மிகவும் பலமில்லாமல், நடுரோட்டில் அமைக்கப்பட்டுள்ளதால் வியாபாரம் செய்வது கடினமாகியுள்ளது.
வியாபாரிகள் பாதிக்கப்படாமல், பாதுகாப்பான மற்றும் சீரான கடைகள் டி.பி.கே.எல் மூலம் வழங்கப்பட வேண்டும். மேலும், உள்ளூர் வியாபாரிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்,” என்று கேட்டுக்கொண்டார்.
