
கோலாலம்பூர் லெபோ அம்பாங் — இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக தளமாக விளங்கும் லெபோ அம்பாங் வர்த்தக சங்கத்தின் 16ஆவது ஆண்டு தீபாவளி விழா, வருகிற அக்டோபர் 11-ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. மதியம் 2.00 மணி முதல் நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சிகள், சமூக சேவைகள், அன்பளிப்புகள் என பல்வேறு சிறப்புகள் நடைபெறவுள்ளன.
இன்று மாலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் தெரிவித்ததாவது,
“இந்த விழாவில் கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தபா, மஇகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக பங்கேற்கின்றனர். மேலும், பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார்.
சங்கத்தின் செயலாளர் இராஜன் கூறுகையில்,
“இந்த 16ஆவது ஆண்டு விழாவில் நாட்டின் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளில் அசத்தவுள்ளனர். அதேசமயம், பொதுமக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்படும். மேலும், தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 25 மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும்,” என்றார்.

100 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரிய தளமாக விளங்கும் லெபோ அம்பாங் தற்போது 47 இந்தியர்களின் கடைகளைக் கொண்டுள்ளது. “இந்தியர்களின் பாரம்பரியத்தை நிலைநிறுத்தும் வகையில் லெபோ அம்பாங் மேம்படுத்தப்பட வேண்டும் என விலாயா அமைச்சரிடம் வலியுறுத்துவோம்” என்றும் அவர் தெரிவித்தார்.
இவ்விழாவை நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் கவிமாறன் நடத்துகிறார் என்பது சிறப்புச் செய்தியாகும்.



