
செய்தி : கோபி
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக முன்வைக்கப்பட்ட இரண்டு குற்றச்சாட்டுகளை முன்னாள் தேசிய வூஷு பயிற்சியாளர் சியா கியான் கியோவ் இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்தார்.
குற்றச்சாட்டுகள் நீதிபதி நோர்ஷிலா கமருடின் முன் வாசிக்கப்பட்ட போது, கியான் கியோவ் குற்றத்தை மறுத்து விசாரணை நடத்துமாறு கோரினார்.
முதல் குற்றச்சாட்டின்படி, அப்போது 14 வயது 7 மாதமாக இருந்த தனது மாணவியை உடல் ரீதியாக பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
இதே பாதிக்கப்பட்டவரை, அவர் 15 வயது 3 மாதமாக இருந்தபோது மீண்டும் அதே செயலை செய்ததாக இரண்டாவது குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு குற்றச்சாட்டுகளும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றச் சட்டம் 2017 இன் பிரிவு 14(ஏ), பிரிவு 16(1) உடன் இணைத்து கையாழ்த்தப்பட்டுள்ளன.
துணை அரசு வழக்கறிஞர் முகமது ஹைருல் இக்ராம் ஹைருதீன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 15,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கி ஒரு மலேசிய உத்தரவாதத்தையும் விதிக்குமாறு கோரினார். கூடுதலாக,
- சர்வதேச கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்,
- மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும்,
- பாதிக்கப்பட்டவருக்கும் அரசு சாட்சிகளுக்கும் எந்தவித குறுக்கீடும் செய்யக்கூடாது
என்பனையும் கோரினார்.
ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர் தனது கடுமையாக நோய்வாய்ப்பட்ட தாயை கவனித்து வருவதால் ஜாமீன் தொகையை குறைக்க வேண்டும் என்று பாதுகாப்பு வழக்கறிஞர் சிவநந்தன் ராகவா கோரினார்.
நீதிமன்றம் இரு குற்றச்சாட்டுகளுக்கும் ஜாமீன் தொகையை தலா 7,500 ரிங்கிட் என நிர்ணயித்து, ஒரு மலேசிய உத்தரவாதத்துடன் அரசு தரப்பு கோரிய கூடுதல் நிபந்தனைகளையும் விதித்தது.
